நஞ்சோடு போக இருந்த அதிர்ச்சி
யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளர் கே.ரி.கணேசலிங்கம் எதிர்கால சந்ததியினர்க்கு விரிவுரை நடத்திக்கொண்டிருக்கிறார். அவரது வீட்டுவேலைக்கார சிறுமி தற்கொலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறார். நஞ்சருந்தி தற்கொலைசெய்ய முயற்சித்த இந்த ஏழைச் சிறுமியை அயலவர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள். அதாவது உண்மை நஞ்சில் கரைக்கப்பட முன்னரே அவள் காப்பாற்றப்பட்டாள். பொலிசாரிடம் அவள் கொடுத்த வாக்குமூலத்தில் இந்தப் "பெரியவர்" தன்னை 40 முறைக்குமேல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சிறுமி கதறுகிறாள். அவளுக்கு வயது 13. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஏழைச் சிறுமி. இதனைத் தொடர்ந்து இவர் பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்கான போராட்டத்தை ஆதரித்து, விடுதலைப் புலிகளின் சர்வதேச மாணவரமைப்பின் பேச்சாளராக இந்தக் கணேசலிங்கம் வேறு உழைக்கிறார் என்று தெரியவருகிறது. அநீதிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மரபு யாழ் பல்கலைக்கழகத்துக்கும் உரியது. இன்றைய மௌனம் இந்த மரபின் இன்றைய இலட்சணத்தை, இன்றைய ஜனநாயகச் சூழலை, அசட்டையை படம்பிடிக்கிறது. பாடசாலைச் சிறுமியை கவசவண்டியால் மோதி கொலைசெய்த இராணுவத்துக்கு எதிராக எரிந்த நெருப்பு இன்று தீப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்டுள்ளது. ஆக பெண்கள் மீதான ஆணதிகாரம் இன்னமும் கண்டுகொள்ளப்படாமல்தான் இருக்கிறது. பெண்கள் மீதான வல்லுறவுகள் சித்திரவதைகள் கொலைகள் எல்லாமே அரசியல் எதிரிக்கெதிரான ஆயுதமாக மட்டும் போய்விடும் அவலம் எம்முடையது.
இந்தக் குற்றத்தை இழைத்த எத்தனைபேர் தந்திக் கம்பங்களில் தொங்கியிருப்பார்கள். இருந்தும் என்ன? குடிசையிலிருந்து பல்கலைக் கழகம் வரை இந்தப் பேய் உலாவத்தான் செய்கிறது. ஆயுதம் ஒரு சர்வரோக நிவாரணியல்ல. சமூகத்தில் உலவும் ஆணாதிக்கப் பேயை அழிப்பதற்கு முதலில் அதன் பரிமாணம், அதன் உளவியல் புரிந்துகொள்ள வைக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில்; ஒரு இம்மியும் நகர்ந்துகொள்ளாத சமூகம் எம்முடையது என்றே திரும்பத் திரும்ப எண்ணத் தோன்றுகிறது.
மேற்கத்தைய இயந்திர வாழ்வின் ஓட்டத்துக்குள்கூட இல்லாத வீட்டுவேலைக்கார முறைமை கீழைத்தேயத்தின் அசைந்து செல்லும் வாழ்வியலுக்குள் இயங்குகிறது. அதுவும் யாழ் மேட்டுக்குடியின் மனோபாவத்தில் இது செழித்துத்தான் இருக்கிறது. இதிலும் வேலைக்கமர்த்தப்படும் பெண்கள்மீது இவ்வாறான பாலியல் துன்புறுத்தல்கள் பல நடக்கின்றன. பல தெரியவராமலே போய்விடுகின்றன. ஒருவித அடிமை முறையில் அவர்கள் நடத்தப்படுகிறார்கள். இதைப் பேணிக்கொண்டு; விடுதலைக்கு -கணேசலிங்கம் போன்றோர்- பரப்புரை செய்வது நகைப்புக்குரியது.
கணேசலிங்கம் ஆணாதிக்கவெறியின் ஒரு வகைமாதிரி. ஒரு சிறுமியின்மீது இந்தப் பேயை ஏவிய பொறுக்கித்தனத்தக்குச் சொந்தக்காரார். சட்டப்படியான கிரிமினல். உடல் உள ரீதியில் ஒரு பெண்ணின் வாழ்வைச் சின்னாபின்னமாக்கிய ஆணாதிக்க வெறியின் குறியீடு. அவரது விரிவுரை பரப்புரை எல்லாவற்றின்மீதும் காறி உமிழ்ந்திருக்கிறது இந்தச் சம்பவம்.
- மாதவி