A TAMIL E-ZINE FOR WOMEN'S WRITINGS, ARTS & LITERATURE - OODARU
Best Viewed on Internet Explorer

font type:
tamil unicode

published on
2005 June

editors:
ranji(swiss)
deva(germany)

email:
udaru@bluewin.ch



make a comment

உங்கள் பதிவை தமிழ் யுனிகோட் இல் எழுதிக்கொள்ளுங்கள். நன்றி.

எழுத்துருமாற்றி
நன்றி: சுரதா.கொம்


Friday, November 20, 2009
தாட்சாயிணியின் தூரப் போகும் நாரைகள்

இதழியல் அறிமுகம்

தாட்சாயிணியின் தூரப் போகும் நாரைகள்

90 களின் பின்னரான ஈழத்து இலக்கியப் போக்கில் முக்கியமான ஒரு பெண் படைப்பாளியாக தன்னை அடையாளங் காட்டியுள்ள தாட்சாயிணி சிறுகதைத்தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.  அத்துடன் கவிதைகளையும் எழுதி வரும் இவரின் சிறுகதைத் தொகுப்புக்களான ஒரு மரணமும் சில மனிதர்களும், இளவேனில் மீண்டும் வரம், தூரப் போகும் நாரைகள் ஆகிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.

இடப்பெயர்வின் காரணமாக கணவன் வன்னியில் குண்டடிபட்டுத் தனித்துப் போக அவனைத் தேடித் தனது உறவினர் ஒருவருடன் செல்லும் பெண்ணை (வெளியில் வாழ்தல்) அவனுடன் ஓடிப்போய்விட்டதாக கதைகட்டி அவளின் குழந்தையின் காதில் விழும்படி கதைக்கும் சனங்கள் பற்றிய சித்திரிப்பு அவரின் சிறுகதைகளில் துல்லியமாக கதையாடப்பட்டுள்ளன. இதேபோல் பெண் பற்றிய கதைகள் மட்டுமல்லாமல் இவரின் வேறு கதைகளிலும் இந்தப் பண்பினைக் காணமுடியும். 90 களின் பின்னர் மக்கள் எதிர்கொண்ட போர்க்கால வாழ்வின் நெருக்கடிகளைப் பதிவு செய்கின்றன. போரின் ஊடான மக்களின் வாழ்வு அவர்களுக்கு உடல் உளரீதியாக எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதனை இவரின் அதிகமான சிறுகதைகள் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன

புதிய கதைகளையும் புதிய உத்திகளையும் நோக்கி தாட்சாயணி தொடர்ந்தும் பயணிக்க வேண்டும். அப்போது வடிவச் செழுமையும் பெண்களின் உணர்வுநிலைகளை மேலும் ஆழமாகப் பதிவுசெய்யும் பெண்மொழியுடன் கூடிய கதைகளும் உருவாகுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

 

யாழில் இருந்து வெளிவரும் ஜீவநதியில் இவரின் கதைகள் கவிதைகள் என்பனவும் இவர் பற்றிய குறிப்புகளும் இவரின் சிறுகதைத்தொகுப்புகளுக்கு விமர்சனங்களும் வெளிவந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

Nove  2009

 

comments  

Thursday, November 19, 2009
தூய்மையானவன்

- சலனி (இலங்கை)

தூய்மையானவன்

இப்போதெல்லாம்
சருகுகள்தான் ஢டி வருகின்றன.
நீயில்லை
சாய் பொழுதில் மினுமினுக்கும்
மாதுளந் துளிர்கள்
எவ்வளவு அழகு பாரேன்
உன்னையும் போலத்தான்
கந்துகளின் இளமை
உன்னடையதைப் போன்றது தான்
பூக்களின் இளஞ்சிகப்பு
தொடும் கன்னங்களின் பொழிவு
சிறிய கன்னங்களின் பொழவு
சிறிய முட்கள்
கன்னம் சுற்றிப்படர்ந்த இளம் நரை
மெல்லப்படரும்
உன் முகம் முழுதும்
இந்த மாதுளையாகிப் போகிறது.

Nove 2009

comments  

Tuesday, November 17, 2009
இரண்டடுக்குச் சிந்தனை

குட்டி ரேவதி (இந்தியா)

இரண்டடுக்குச் சிந்தனை

பழங்களைத் தின்று விதைகளைக் கழிக்கும் போதேல்லாம் தேடுகிறேன் ஜன்னலுக்கு வெளியே அந்தப் பக்கம் ஒரு சிறு மண்நிலத்தை. ஆனால் விதைகள் எப்பொழுதும் சிமெண்ட் தரையைத் தான் மோதி உடைகின்றன.

ஏராளமான தோழிகள் வாழ்க்கையின் அந்தரங்கம் வரை தொட்டு விட்டு ஏதுமே நடவாதது போல் வெளியேறுகின்றனர், எனில் அவர்கள் ஆண்களிடம் அன்னியோன்யம் தொடுவது எப்படி?

மனதுக்குள் ஏராளமான கதைகளை வைத்திருந்தேன். ஆனால் காலத்தின் ஓட்டத்திலும் நெருக்கடியிலும் அக்கதைகள் எல்லாம் வெளியேறுவதற்கு வாய்ப்பின்றி கலைந்து குலைந்து ஒன்றோடு ஒன்றாய் பின்னிக் கொண்டு ஒரே கதையாய் ஆகிவிட்டன.

கவிதைகளை விவாதிப்பவரை விட, விளைவிப்பவரை விட கவிதைகளை வாசிப்பவர்கள் சமீபத்தில் அதிகமாகிவிட்டனர். அரங்கங்கள் அதிகமாகிவிட்டதால் இருக்கலாம். ஆனால் எழுதியவர்களே தம் கவிதைகளையே ஏன் வாசித்துக் கொண்டு இருக்க வேண்டும்?

வீடு நம்முடன் எப்பொழுதாவது தான் உரையாடுகிறது. வெளி நம்முடன் உரையாடி உரையாடிக் களிக்கிறது.

தன்னுடலுக்குள் தானே நுழைவதற்கான ஒரே வழி தான் மூச்சு என்று சித்தர்கள் ஆணித்தரமாகச் சொல்ல விரும்பியிருக்கலாம்.

தமிழ் சினிமா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பார்வையாளர்களுடன் எதையுமே பரிமாறிக்கொள்வதேயில்லை. அதுவே தனக்குத் தானே ஓயாமல் அர்த்தம் சலிக்கப் பேசி ஓய்ந்து போகின்றன. படம் முடிந்து எல்லோரும் வெளியேறிய பின் திரையரங்கின் தரையில் சிதறியிருக்கும் சோளப்பொரிகள் போல வறுபட்ட வெறுமையே எஞ்சியிருக்கிறது.

பழைய நிறைவேறாத நெருங்க அனுமதியாத காதல் நாளடைவில் மழையின் ஈரக்காற்றினால் பாசம்படர்ந்த தலையணையைப் போல.

தங்கைகள் விசித்திரமான பெண்கள். அக்காக்கள் தவற விட்ட கேளிக்கைகளை எல்லாம் தேடிப் பிடித்துக் கொண்டாடும் வாழ்க்கையை வரைந்து கொள்ள முடிகிறது அவர்களால்.

காதலர்கள் எல்லோரும் ஆண்களாயிருக்க வேண்டிய அவசியமில்லை, நண்பர்களெல்லோரும் பெண்களாயிருக்க வேண்டிய அவசியமுமில்லை என்ற நிலைக்கு உலகம் உய்வடைந்த பின் என் தனிமை எனக்கு மிகவும் அவசியமானதாயிற்று.

ஆண்களின் உரையாடல்கள் சலிப்பூட்டுபவையாக இருக்கின்றன. இரத்தக் கறைகள் படர்ந்த சுவர்களைப் போல எப்பொழுதோ நிகழ்ந்து முடிந்த வன்முறையை எப்பொழுதும் நினைவூட்டுவதாலோ என்னவோ?

எனக்கான சென்னை தொடங்குவது, என் தோழிகளுடன் சேர்ந்து காபி அருந்தும் இடத்திலிருந்தும் மனோவுடன் இரண்டாம் காட்சி திரைப்படம் பார்த்துத் திரும்பும் தருணத்திலிருந்தும்

நீண்ட பயணங்கள் தாம் நினைவுகள் சலித்த அகன்ற வெளியை கொடையளிக்கின்றன. ஆனால் அவை தூரத்தால் மட்டுமே வரையப்படுவதில்லை. நினைவுகளினூடான பயண சிரத்தையையும்.


 

comments  

Friday, November 13, 2009
அரச பயங்கரவாதம் ‐ அறிவு பயங்கரவாதம் ‐ அமைதியின் பயங்கரவாதம்...

மாலதி மைத்ரி (இந்தியா)
அரச பயங்கரவாதம் ‐ அறிவு பயங்கரவாதம் ‐ அமைதியின் பயங்கரவாதம்...
 
("இலங்கையில் கடைசித் தமிழ் குழந்தையும் மடிந்தால் கூட பரவாயில்லை புலிகளை அழிக்கும் வரை சிங்கள அரசு இலங்கையில் குண்டு வீச்சை நிறுத்தக்கூடாது என எதிர்பார்த்தவர்கள். ஈழத் தமிழர்களுக்கு சிங்கள அரச பாசிஸ்டுகளைவிட விடுதலை புலிகள் ஆபத்தானவர்களென நிறுவ பல முறைமுக நேர்முக காட்சிகளை அரங்கேற்றியவர்கள். இதில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் வருடம் ஒருமுறை தமிழகம் வந்து கோயில் கொடைக்கு நிதி அளிப்பது மாதிரி இலக்கிய கூட்டங்களை நடத்தி பாரிவட்டம் கட்டிக்கொள்வதும் மீந்த பணத்தில் பத்திரிக்கை நண்பர்களுக்கு செலவு செய்து தமிழ் பத்திரிகைகளில் நேர்காணல்களை போடவைத்து ஜனநாயகத்தையும் முதலாளித்துவத்தையும் பன்னாட்டு சந்தை விரிவாக்கத்தையும் புலி பாசிசத்தையும் கேள்வி கேட்டுவிட்டு செல்வார்கள்.")
-----
 
இறுதி யுத்தத்தில் இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையின் கொடூரத்தை அவ்வப்போது சிறுசிறு அடையாள போராட்டங்கள் மட்டும் நடத்தியும் மௌனமாகவும் கடந்து வந்துவிட்ட தமிழ் பேசும் இந்தியர்களின் ஈழத் தமிழர்களின் மீதான ரத்த பாசத்தையும் நாடகங்களையும் சண்டைக் காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தோம். ஈழ உறவுகளின் துயரனைத்தும் என் தலைமுறையின் மீதான மொத்த பழியாக என் மேல் சுமத்தப்பட்டு கழுவேற்றப்பட்டவளாக உணர்கிறேன்.
 

எங்கள் வாக்குரிமைக்கு உள்ள மதிப்பே தொரியாத நாங்கள் எப்படி இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியும். அல்லது எங்கள் வாக்கினைப் பெற்ற ஒருவரால் எப்படித் தடுத்து நிறுத்த முடியும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.
 
தமிழக அரசியல் தலைவர்களால், தமிழினத் தலைவர்களால் ஏதும் முடியாத போது சாமானிய தமிழர்களால் என்ன செய்திருக்க முடியும் என்ற பதிலைக் கூறிக்கொண்டு நம்முடைய குற்றவுணர்வி லிருந்து தப்பிக்க முயற்சித்தோம். ஈழ மக்கள் தமிழகம் தங்களைக் காப்பாற்றும் என்றும், தங்களுக்குப் பேராபத்து ஏற்படும் நிலைமை உருவானால் தமிழகமே கொழித்தெழுந்து இலங்கையைப் பணியவைக்கும் என்றும் நம்பினார்கள். தமிழகத் தலைவர்கள் தங்களை கைவிட மாட்டார்கள் என ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். ஈழத் தமிழாகள் தொடா;ந்து தமிழகத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டார்கள்.
 
தமிழகத்தில் மாணவர்கள், வழக்குரைஞர்கள், மனிதவுரிமை இயக்கங்கள், எழுத்தாளர்கள், பெண்கள் இயக்கங்கள் மற்றும் பல்வேறு சிறு குழுக்கள் இணைந்தும் தனித்தும் போரை நிறுத்த குரல் எழுப்பிக்கொண்டுதான் இருந்தனர். இவைகள் மத்திய மாநில அரசுகளை நிர்பந்திக்கும் அளவுக்கு பலம் பெற்றிருக்கவில்லை. ஆனால் இச்சிறு போராட்டங்களைக் கூட தமிழக அரசு அனுமதிக்கத் தயாராகயில்லை. முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை நிறுத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை உளவுத்துறையாலும் காவல் துறையாலும் பழிவாங்கியும் வழக்குரைஞர் களின் மண்டையைப் பிளந்தும் தமிழின உணர்வைப் புலப்படுத்திக் கொண்டது. ஈழ மக்களின் போராட்டம் வெடிகுண்டுகளால் அடக்கப்பட்டது என்றால் தமிழகத்தில் சிறு சிறு மக்கள் எழுச்சியும் ஜனநாயக முறையிலான போராட்டங்களும் லத்தி முனையில் ஒடுக்கப்பட்டன.
 
இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி ஈழத் தமிழர்களை கொன்றொழிக்க துணை போனது உலகறிந்த செய்தி. இதை இலங்கை அரசும் வெளிப்படையாக அறிவித்தது. நிருபர் நிதின் கோகுலே தன் நூலில் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார். மதிமுக தலைவர் வைகோ அவரது நூலிலும் இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறார்.
 
 
இந்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சரும் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் ஒப்புக்கொள்கிறார். ஆனால் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டும் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து கொண்டும் ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்துவது, ஈழத் தமிழர் எழுச்சிக் கூட்டங்கள் நடத்துவதென பா.ம.க., ம.தி.மு.க, கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் சேர்ந்து நடத்திய அரசியல் நாடகங்களின் அவலத்தை புரிந்து கொள்ளும் திறனற்ற நிலையில் தமிழக மக்கள் இல்லை.
 
 ஈழத் தமிழர்களை கொல்ல இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுத்துதவும் ஒரு மத்திய அரசில் இருந்துகொண்டே எப்படி ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்காகப் போராட முடியும். இந்த சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணி இலங்கைத் தமிழர்களை பாது காக்கும் என்று தமிழுணர்வாளர்கள் நம்பியது இன்றைய அரசியல் சதித்திட்டங்களை அறிந்து கொள்ள முடியாததின் வெளிப்பாடுதான்.
 
இந்த கொள்கை முரண்பட்ட கூட்டணியினர் சேர்ந்து இந்திய அரசு மூலம் ராஜபட்சேவை பணிய வைத்துவிடுவார்கள் என எதிர்பார்த்த ஈழ ஆதரவாளர்கள், ஈழ மக்களின் நம்பிக்கை யை மண்ணோடு மண்ணாக்கியது அரசியல் தந்திரம் என்பதா, அரசியல் சூழ்ச்சி என்பதா? இந்த துரோகத்தைத் தாங்க முடியாமல்தான் முத்துக்குமரன் தமிழக அரசியல்வாதிகளின் முகங்களை அம்பலப்படுத்தி மாண்டான். இதையும் தமிழக அரசியல்வாதிகள் தங் களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
 
மற்ற குழுக்களின் ஈழ ஆதரவுப் போராட்டங்களை தமிழகத்தில் ஒடுக்கிக் கொண்டே திமுகவும் அதன் கட்சிகாரர்களும் நடத்திய போராட்டங்களும் சிந்திய கண்ணீரும் தொடரும் ஒப்பாரிக் கவிதைகளும் கடிதங்களும் ஓநாய், ஆட்டுக்குட்டி நாடகத்தின் முற்பகுதி காட்சிகள். முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நிறுத்தப்பட்டதாக அறிவித்தது இடைவேளை காட்சி. இலங்கையில் முப்பதாயிரம் தமிழர்கள் ஓரே நாளில் கொல்லப்பட்ட அன்று தமிழக முதல்வர் டெல்லிக்குப் போய் மத்திய மந்திரி பதவிகளுக்கு பேரம் பேசியது உச்சபட்ச காட்சி.
 
இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை அடித்து நொறுக்கி கொண்டிருக்க பத்து தமிழக எம்.பிகள் குழு இலங்கை சென்று ராஜபட்சே அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கி விருந்துண்டது இயேசு யுதாஸின் இறுதி விருந்து காட்சியை மிஞ்சியவை.
 
உலக வங்கி, பன்னாட்டு நிதி அமைப்புகள் ராஜபட்சே அரசின் போர்க் குற்றங்களுக்காக நிதியுதவி கொடுக்க மறுக்கும் போது, நம் தமிழக எம்.பிகளின் நற்சான்றிதழ் போர் குற்றவாளியென அறிவிக்கபட வேண்டிய ராஜபட்சேவுக்கு கருணை மனுவாக ஐ.நா. சபையில் சாட்சியமளிக்கப் போகிறது. இந்தியா ஐநூறு, ஐநூறு கோடியாக வழங்கிக் கொண்டிருக்கப் போகிறது. இலங்கையில் தமிழக அரசியல்வாதிகளின் முதலீடுகளும் பெருகத்தான் போகிறது. உலக நாடுகளின் முன் தமிழக அரசியல்வாதிகள் பொய்சாட்சியுரைத்து தங்கள் அரசியல் பேரங்களை லாபகரமாக முடித்துக் கொண்டார்கள்.
 
 
அறிவுஜீவிகள் ஈழத் தமிழர்களுக்காக கவிதைகளில், தலையங்கங்களில் ரத்தக் கண்ணீர் வடிப்பதும், பொத்தாம் பொதுவாக இந்திய அரசை கண்டிப்பதும் அரசியல்வாதி களைக் கண்டித்து ரத்தம் கொதிப்பதும் பிறகு தங்கள் நூலை வெளியிடவும், கூட்டங்களுக்கு தலைமையேற்கவும், அரசு நூலகங்களுக்கு புத்தக அனுமதி பெறவும் விளம்பரங்கள் பிடிக்கவும் விருதுகளுக்காகவும் பகையாளி களை பழி தீர்க்கவும் அரசியல்வாதிகளுடன் உறவாடுவது அவமானக் காட்சிகள். மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், திரைப்படக்காரர்கள், இலக்கிய மேடைகளையும் இலக்கிய கூட்டங்களையும் அலங்கரிப்பதின் அளவைப் பொறுத்து பல எழுத்தாளர்களின் நட்சத்திர அந்தஸ்த்து கணக்கிடப்படுகிறது. எழுத்தாள தொண்டர் படையும் அதற்கு தகுந்தாற்போல் இருக்கும். இவர்கள் உலகின் எந்த மூலையில் நடக்கும் அரச பயங்கரவாதத்தையும் எதிர்ப்பார்கள். ஆனால் அரசியல், இலக்கிய விழாக்களுக்குச் சென்று மன்னர் துதிபாடி பரிசில் பெறுவதும் இந்திய அரசியல்வாதிகளுக்கு இலக்கிய மேடையில் புனிதர் பட்டம் வழங்குவதும் கேடுகெட்ட தந்திரக்காட்சிகள்.
 
அறிவுஜீவிகளின் இன்னொரு குழு புலி பாசிசத்தை எதிர்ப்பவர்கள். மரண
தண்டனையை எதிர்ப்பவர்கள். இன ஒடுக்கு முறையை எதிப்பவர்கள் என அடையாளம் காட்டிக்கொண்டவர்கள். இலங்கையில் கடைசித் தமிழ் குழந்தையும் மடிந்தால் கூட பரவாயில்லை புலிகளை அழிக்கும் வரை சிங்கள அரசு இலங்கையில் குண்டு வீச்சை நிறுத்தக்கூடாது என எதிர்பார்த்தவர்கள். ஈழத் தமிழர்களுக்கு சிங்கள அரச பாசிஸ்டுகளைவிட விடுதலை புலிகள் ஆபத்தானவர்களென நிறுவ பல முறைமுக நேர்முக காட்சிகளை அரங்கேற்றியவர்கள். இதில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் வருடம் ஒருமுறை தமிழகம் வந்து கோயில் கொடைக்கு நிதி அளிப்பது மாதிரி இலக்கிய கூட்டங்களை நடத்தி பாரிவட்டம் கட்டிக்கொள்வதும் மீந்த பணத்தில் பத்திரிக்கை நண்பர்களுக்கு செலவு செய்து தமிழ் பத்திரிகைகளில் நேர்காணல்களை போடவைத்து ஜனநாயகத்தையும் முதலாளித்துவத்தையும் பன்னாட்டு சந்தை விரிவாக்கத்தையும் புலி பாசிசத்தையும் கேள்வி கேட்டுவிட்டு செல்வார்கள். ராஜபட்சே கொண்டு வந்த மயான அமைதிக்காக காத்திருந்தவர்கள். போர் ஒரு கொண்டாட்ட காட்சியாக ஊடகங்களுக்கு தீனியான அவலத்தின் சாட்சியாக இன்று 3 லட்சம் தமிழர்கள் வன்னியில் திறந்த வெளி சிறைக்குள் ஒரு வேளை உணவுக்குக் கையேந்தி கிடக்கிறார்கள்.
 
ஊடக முதலாளிகள் தொழில் அதிபர்களாக வும் அரசை அமைப்பவர்களாகவும் அரசை மாற்றுபவர்களாகவும் இருப்பதால் இந்திய ஊடகங்கள் தங்கள் கண்ணெதிரே நடந்த தமிழினப் படுகொலையை கண்டிக்கவில்லை.
 
மனிதவுரிமை மீறல்களை உலகின் கண்களி லிருந்து மறைத்தன. பல ஊடகங்கள் பல சமயங்களில் சிறு செய்தியைக்கூட கசிய விடாமல் பார்த்துக்கொண்டன. இலங்கை அரசு எத்தனை ஊடகவியலாளர்களை கொன்றாலும் பரவாயில்லை அக்கொலை குறித்து ஒரு கட்டுரை போட்டுவிட்டு தமது பணியைத் தொடர்ந்தன. இலங்கையில் தங்கள் முதலீட்டுக் கணக்கை ஆரம்பிக்க தமிழர்களை கொன்று முடிக்கும் நாளுக்காக காத்திருந்தன. எண்ட் த கேம் என மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே இலங்கைப் போர் வரலாற்றை ஆங்கில ஊடகங்கள் தொகுத்து அளித்தன.
 
தமிழர்களின் தேசியஇனப் போராட்டத்தை விளையாட்டு என கொச்சைப்படுத்திய ஊடக பயங்கரவாதம் ஜனநாயக நாடு என அழைத்துக்கொள்ளும் இந்தியாவில் தான் சாத்தியம்.

இந்த நூற்றாண்டில் நம் கண்ணெதிரே கூப்பிடும் தூரத்தில் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் தமிழர்களின் உயிரை குடித்தது இந்திய, இலங்கை, தமிழக அரச பயங்கரவாதம். ஈழத் தமிழினப் படுகொலையைப் பார்த்து கொண்டிருந்த நாம் அனைவரும் குற்றவாளிகளாக வரலாற்று முன் நிற்கிறோம்.
 

இந்தியத் தமிழர்கள் முதலில் இங்கு நடக்கும் அரசு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட முன்வரட்டும். இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட 400க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு இந்திய, இலங்கை அரசை நிர்பந்தித்து நீதி தேடி தரட்டும். இலங்கை ராணுவத்தின் அத்து மீறலைத் தடுத்து நிறுத்தட்டும். பழங்குடிகள், தலித்துகள், மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரங்களை உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளிடமிருந்து மீட்டெடுத்துத்தர என்ன திட்டங்களை இவர்கள் வைத்திருக்கிறார்கள். தீண்டாமை தலைவிரித்தாடும் தமிழகத்தை சீரமைக்க என்ன செய்யப் போகிறார்கள். இவற்றில் எதையுமே செய்ய முடியாத தமிழக அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டத்துக்கு என்னவகைப் பங்களிப்பைத் தரமுடியும். இவர்களின் ஆதிக்க அரசியலுக்கு ஈழத்தமிழர்களை பலி வாங்கியது போதும். இறுதி வேண்டுகோள். ஈழத் தமிழர்களே மீண்டும் இந்தியத் தமிழர்களை நம்பாதீர்கள். நம்பி இழந்தது போதும்.
 
நன்றி அணங்கு
 

comments  

மரணம் படர்ந்த முற்றங்கள்...

- தில்லை (சுவிஸ்)

மரணம் படர்ந்த முற்றங்கள்...

புரையோடிய

ஆதிக்க உணர்வுகளால்

உக்கி புழுத்து ஒடுவச்சு

சீழ்வடிகிறது தேசியம்


விடுதலைக் கனவின்

விபரம் புரியாத

நான் சின்னவளாயிருந்த

ஆயிரத்து தொள்ளாயிரத்து..........சொச்சங்களில்

நான் கேட்கிறேன்

ஏன் பெரியம்மா அழுகிறாய் என்று

இலங்கையை உருக்கி

இரண்டாக உலைவார்க்க

மகன் போய்ற்றான்

இயக்கத்திற்கு என்றாள்


விடுதலைக் கனவின்

விபரம் புரிந்து

நான் பெரியவளாயிருந்த

இரண்டாயிரத்து........... சொச்சங்களில்

ஏன் என்று கேட்க நாதியற்று

எனது ஊரே அழுதது

வடகிழக்கை உருக்கி

இரண்டாக உலைவார்க்க

எங்கள் மகள்களையும்

மகன்களையும்

பட்டப்பகலிலே

பறிகொடுத்து விட்டோமென்று.


வஞ்சிக்கப்பட்ட தெருக்களிலும்

வீடுகளிலும்

ஓலைக்குடிசைகளிலும்

மோப்பமிட்டலைந்து

கீறி இரண்டாக நிலம்பிளந்து

நிரந்தரங்களை அழித்து

கண்ணிமைக்கும் பொழுதில்

காணாமல் போனது யுத்தம்


போர் ஓய்த பின்பும்

புரையோடிய

ஆதிக்க உணர்வுகளால்

உக்கி புழுத்து ஒடுவச்சி

சீழ்வடிகிறது தேசியம்

Nove 2009

 

comments  

Wednesday, November 11, 2009
கவிஞர்,எழுத்தாளர் சல்மாவுடன் ஓர் உரையாடல்

கவிஞர்,எழுத்தாளர் சல்மாவுடன் ஓர் உரையாடல்

? ஈழ மக்களுக்கு இலக்கியவாதிகள் ஒன்றுமே செய்ய வில்லை ' என்கிறாரே தமிழ்நதி

என்னை அப்படி சொல்ல முடியாது. ஈழத்தமிழருக்கான போராட்டத்திற்காக என்னை நோக்கி என்ன வெல்லாம் கேட்கப்பட்டதோ அதை எல்லாம் நான் கொடுத்திருக்கிறேன். நிதி கொடுத்திருக்கிறேன். என் படைப்புகளை கொடுத்திருக்கிறேன். என் பங்களிப்பை கொடுத்திருக்கிறேன். ஈழப்போராட்டத்திற்காக நான் சார்ந்திருக்கிற கட்சி என்னென்ன இயக்கங்களை மேற்கொண்டதே அத்தனையிலும் பங்கெடுத்திருக்கிறேன்.

ஈழப்போராட்டத்தின் மீதான எனது  அன்பும் பங்கெடுப்பும் இன்று நேற்றானது அல்ல. நான் பதினைந்து வயது பெண்ணாக இருக்கும் போதிலிருந்தே அது தொடங்கி விட்டது. அந்த சமயத்தில் தான் குட்டிமணியையும் ஜெகனையும் சிங்கள அரசு கொலை செய்திருந்தது. அவர்களின் கண்ணைத் தோண்டி அவர்களின் இன்னொரு கண் முன்னேயே பூட்ஸ் காலால் நசுக்கியிருந்தது. அந்த செய்தியை ராணி பத்திரிக்கையில் படித்தேன். அன்றைய நாள் முழுவதும் அழுது கொண்டே இருந்தேன். அப்பொழுதே அவர்களுக்காக பணம் கொடுத்திருக்கேன். நான் சேர்த்து வைத்திருந்த முந்நூறு ரூபாய் ஐநூறு ரூபாய் பணத்தையெல்லாம் அவர்களின் போராட்டத்திற்கு மணியார்டர் செய்திருக்கிறேன்.

இந்த மே 17க்கு முன்பாக படைப்பாளிகளின் சார்பாக ஒரு கண்டணக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொள்ள முடிவு செய்திருந்தேன். அங்கு வாசிக்க ஒரு கவிதையும் எழுதி வைத்திருந்தேன்.கடைசி நேரத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதை ஏற்பாடு செய்திருந்த தோழியிடம் அந்தக் கவிதையை அனுப்பி வைக்கிறேன்இ அந்தக் கூட்டத்தில் வாசியுங்கள் என்று கேட்டேன். அவர் அப்படியெல்லாம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டார். அதனாலேயே என் பதிவு அங்கு இல்லாமல் போய் விட்டது. அதை உங்களிடம் தருகிறேன் ..வாய்ப்பிருந்தால் அதை உங்கள் தளத்தில் பிரசுரியுங்கள். இங்கே நம்மவர்களிடம் இருக்கிற பிரச்சினை இதுதான்.இவர்கள் ஏதாவது ஒரு பெயரில் ஒரு அமைப்பைத் துவங்குகிறார்கள்.அதனடிப்படையில் ஒரு அதிகாரத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். நீ உள்ளே வரலாம் நீ வரக்கூடாது என்று சட்டம் போடத்துவங்குகிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் UK சென்றிருந்தேன். அங்கே பல கண்டன கூட்டங்களும் போராட்டங்களும் ஈழத்தமிழர்களுக்காக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இரண்டு மாணவர்கள்  தொடர் உண்ணாவிரதம் அமர்ந்திருந்தார்கள். நானும் அவர்களுடன் இரண்டு நாட்கள் அமர்ந்திருந்தேன்.இப்போது என்ன பேசி என்ன செய்ய? எதுவுமே செய்ய முடியாமல் நின்று விட்டோம். சில லட்சம் தமிழர்களை சாகக் கொடுத்து விட்டோம்.

அங்கு நடந்த கோரப் படுகொலைக் காட்சிகளை என்னால் பார்க்க முடிவதில்லை. அதனாலேயே அவைகள் இடம் பெற்றிருக்கும் இணைய தளங்களை கூட நான் பார்ப்பதில்லை. சமீபத்தில் ஒரு நண்பர் மிகவும் சொல்லி புகலி இணையதளத்தை ஒரு விஷயத்திற்காக பார்த்தேன். அதில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இறந்து கிடந்த படம் இருந்தது. வாய் விட்டு அழுதேன்.(இதை சொல்லும் போது அழுது விடுகிறார்) அந்தக் குழந்தையை தலையில் அடித்து கொன்றிருக்கிறார்கள். இறந்த உடலின் மீது துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள்.யாருடையக் குழந்தையும் தெய்வமே. எல்லாக் குழந்தைகளும் கொண்டாடப் பட வேண்டியவர்களே குழந்தைகளைக் கூட உயிரோடு விட்டு வைக்க முடியாத படி இனவெறியோடு சிங்கள அரசு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. ஆனால் சர்வதேசம் 'பயங்கரவாதம்' என்ற ஒற்றைச் சொல்லை பயன்படுத்தி ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்கள் மீதான போரை நிறுத்தச் சொல்லி ஒரு கொட்டும் மழையில் மனிதச் சங்கிலியாகக் கை கோர்த்து நின்ற தினம் இன்னும் என் நினைவில் இருக்கிறது.அது ஒரு மாபெரும் எழுச்சியாக மாறி அந்த மக்களைக் காப்பாற்றி விடும் என்று தீவிரமாக நம்பினேன்.ஈழத்தில் நடந்தவைகள் தீராத வலியாகவே இன்னும் நெஞ்சில் இருக்கிறது

? இருபது ஆண்டுகளுக்கு மேலாக  எழுதி வருகிறீர்கள்.மறுபடியும் ஒரு புதிய கவிதையை எழுதும் உத்வேகத்தை எது தருகிறது. இதில் கிடைக்கிற பணமா? புகழா? அந்ஸ்த்தா?
 


(சிரிக்கிறார்) கவிதை எழுதுகிறவர்களுக்கு பெரிதாக யாரும் பணம் தருவதில்லை. கவிதைக்கென்று அவர்கள் தரும் பணம் கவிதை எழுதும் எண்ணத்தை அல்ல எந்த எண்ணத்தையுமே உண்டாக்காது. புகழுக்காகவும் அந்தஸ்த்துக்காகவும் நான் எழுதுவதில்லை..சில விஷயங்களின் மேல் எனக்கு கோபம் இருக்கிறது சில விஷபயங்களின் மேல் வருத்தம் இருக்கிறது. எனக்கென்று சில தோல்விகளும் ஆற்றாமைகளும் இருக்கின்றன. இவற்றை கவிதையாக எழுதா விட்டால் நான் நிம்மதி இழக்கிறேன். இந்த நிம்மதி இன்மையே என்னை கவிதை எழுத வைக்கிறது.

? உங்கள் கவிதைகளில் வீட்டைப் பற்றிய கசப்பான எண்ணங்கள் நிறைய பதிவு செய்யப் படுகின்றன. பயணத்தில் இருந்து வீட்டிற்கு உங்களை கொண்டு வந்து சேர்க்கும் சக்தியை துர்தேவதைகள் என வர்ணிக்கிறீர்கள். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் வீடு கசப்பானதாக இருக்கிறதா? இல்லை பொதுவாகவே பெண்களுக்கு வீடு கசப்பானதாக இருக்கிறதா

 நான் எனக்கான உணர்வுகளை மட்டும் எழுதுவதில்லை. எனக்கான உணர்வு சக பெண்களுக்குமான உணர்வாக இருக்கும் போது  மட்டுமே அதை பதிவு செய்கிறேன். வீடு என்று நான் சொல்வது குடும்பத்தை. குடும்பம் பெண்களுக்கு ஒரு தண்டனைக் கூடம்தான். குடும்பம் ஒரு பெண்ணை  சிதைக்கவே செய்கிறது. குடும்பத்தில் ஒரு பெண் இழப்பதே அதிகம்.குடும்ப அமைப்பில் லாபம் அடையும் ஆண்களே அதை அதிகம் சிலாகிப்பார்கள். பெண் சிலாகிக்க எதுவுமில்லை.பெண் குடும்பத்தில் தன் சுதந்திரத்தை சுயத்தை இழக்கிறாள் என்பதே உண்மை.

 ? நீங்கள் முற்போக்கான பெண்ணாக அறியப்பட்டவர். ஆனால் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் குரானின் மேன்மைகளைப் பற்றி  பேசுகிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு

நான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த பெண். நான் என் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் என சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. என் சமூக மக்கள் தலித் மக்களைக் காட்டிலும் பல விஷயங்களில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். துரதிர்ஷ்ட வசமாக அவர்கள்  யார் சொல்வதையும் கேட்க மாட்டார்கள். அரசாங்கம் சொன்னால் கேட்க மாட்டார்கள். படித்தவர்கள் சொன்னால் கேட்கமாட்டார்கள். பெரியவர்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள். ஆனால் குரான் சொல்கிறது என்று சொன்னால் உடனடியாகக் கேட்பார்கள். அந்த மக்கள் மேம்பட வேண்டியிருக்கிறது.அதற்காகவே அந்த நிகழ்ச்சி . அதற்கு வேறெதுவும் காரணம் கிடையாது.

? நம் சமூகத்தில் கவிஞர்களுக்கு இருக்கும் இடமும் அந்தஸ்த்தும் உங்களுக்கு திருப்தியானது தானா

 தனிப்பட்ட முறையில் எழுத்தின் மூலம் எனக்கு நல்ல அந்தஸ்த்தே உண்டாகி இருக்கிறது. எனக்கு நடந்த பல நல்ல விஷயங்களுக்கு காரணமாக என் எழுத்து இருப்பதை நான் உணர்கிறேன். ஆனால் ஒட்டு மொத்தமாக கவிஞர்களுக்கு இது நல்ல அந்தஸ்த்தைக் கொடுத்திருக்கிறது என்று சொல்ல மாட்டேன். நாம் கவிஞர்களையும் கவிதைகளையும் கொண்டாடாத ஒரு சமூகமே.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி உங்கள் கருத்து

 தற்சமயம் அவரைப் பற்றி நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பல கருத்துக்கள் சொல்லப் பட்டு வருகின்றன. ஆனால் நாம் யாருக்கும் எதுவும் தெரியாது என்பதே உண்மை. சார்பான அல்லது எதிரான ஒரு புத்தகத்தைப் படித்திருக்கிறோம் அல்லது படிக்காமல் கருத்து சொல்கிறோம் . பிரபாகரனைப் பற்றி ஈழத்தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியமானது.

 ? உங்கள் பிள்ளைகள் ஒரு கவிதை எழுதும் அம்மாவை எப்படிப் பார்க்கிறார்கள்?

 அவர்களுக்கு என் எழுத்து பற்றியெல்லாம் பெரிதாகத் தெரியாது. நான் பிரபலமாக இருப்பது அவர்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. அவர்களுடைய நண்பர்கள் இவகுப்புத் தோழர்கள் அவர்களிடம் உங்கள் அம்மாவை டிவியில் பார்த்தேன் இ உங்கள் அம்மாவின் புகைப்படத்தை பத்திரிக்கையில் பார்த்தேன் என்று சொல்வது அவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது.

 (தமிழ் கவிதைகள் அமைப்பினருக்கு வழங்கிய உரையாடலை ஊடறுவுக்காக யசோதா)
.

comments  

Tuesday, November 10, 2009
திசநாயகம் உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரிக்கை

- தகவல்- ருவேனிகா(இலங்கை)

திசநாயகம் உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரிக்கை

Release Tissainayagam and all
political prisoners now!

FOR THE FREEDOM OF TISSAINAYAGAM...

Seminar and book launching ceremony
12th November 2009 – 03.00 pm
in
Public Library Auditorium
Colombo

Coments -

Fr. Yohan Devananda
Fr. Sarath Iddamalgoda
Fr. M. Sathivel
Dr. Vickramabahu Karunarathne – Left Front
Vasantha Disanayake – People?s March
Mahinda Devage – Socialist Party
Ajith Rupasinghe – Communist Party – Maoist
Chandrapala Kumarage – Attorney at Law
Champika Serasinghe
Dharmasiri Lankapeli – Journalist

For the Seminar, your participation as
Human Rights defender, is expected with
respect. Please present in time and help
to enrich our effort.

PEOPLE?S MOVEMENT FOR

FREEDOM AND DEMOCRACY

17, Barrack lane, Colombo 02
TP. 011 2430621

comments  


Next Page


<< November 2009 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
01 02 03 04 05 06 07
08 09 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30


ARCHIVE/உள்ளீடு
(ஆண்டு வாரியாக)






கவிஞைகள்
கவிதைகள்

 "poets-poems"


poems on other languages






book collection

வேண்டுகோள் : பெண் படைப்பாளிகள் தங்களது நூல்களை மின்நூல் வடிவில் எமக்கு அனுப்பினால் இந் நூலகத்தில் சேகரமாகும்



கமரா மொழி




இணையசாலை




பெயரிடல்








   










If you want to be updated on this weblog Enter your email here:



rss feed